Friday 24 April 2009

இனப்படுகொலை




இலஙகை போர் உச்சத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.தமிழ் மக்களை விடுதலை புலிகள் கேடயமாக பயன் படுத்துவதாகவும் இதனால் உயிர் பலிகள் அதிகமாகவும் உள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது. கொத்து குண்டுகள் மூலம் கொத்து கொத்தாக படுகொலை மேற்கொள்வது பற்றி மற்ற நாடுகள் பெரிதாக கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கண்டனங்கள் மற்றும் போர்நிறுத்த கோரிக்கைகள் வைத்தால் நம் கடமை முடிந்தது என்று உலக நாடுகள் இருக்கின்றன. தெற்கு ஆசியா ஜாம்பவான் என கூறிக்கொள்ளும் இந்திய பேருக்கு அதிகாரிகளை அனுப்பி போர் நிறுத்தம் செய்ய கோருகிறது. இங்கு உள்ள அரசியல்வாதிகள் இந்த பிரச்னையை வைத்து தேர்தல் சடுகுடு விளையாடுகின்றனர்.


போர் நேரத்தில் பின்பற்ற பட வேண்டிய ஜெனீவா ஒப்பந்தம் எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை வந்து விட்டது.அப்பாவி மக்கள் ரத்தம் தோய்ந்த உடம்புடன் கூட்ட கூட்டமாக வெளியேறும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகின்றன. இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து சமரசம் செய்ய எந்த நாடும் உண்மையான அக்கறை கொண்டு செயல்படாதது கொடுமை. எந்த ஒரு நாட்டிற்கும் எந்த காரணத்திற்க்காகவும் தன் சொந்த மக்களை கொல்ல உரிமை இல்லை. இதற்கும் யூகோஸ்லாவியா , இந்தோனேசியா , மியன்மார் நாட்டில் நடப்பதற்கும் எந்த வித்யாசமும் இல்லை. சொல்ல போனால் இலங்கையில் இருபது வருடமாக நடந்து வரும் இனப் படுகொலை போல் எங்கும் நடந்தது இல்லை. இதற்க்கு ஒரு இணக்கமான தீர்வு காணாமல் நம்ம ஊர் அரசியல் வியாதிகள் தொப்புள் கொடி உறவு , தமிழ் ரத்தம் என்று கூவுகிறார்கள். இங்கே இருக்கும் தமிழன் பிரச்னை தீர்க்க இவர்களால் முடியவில்லை. இவர்கள் எங்கே இலங்கை தமிழனை காபாற்ற போகிறார்கள்.
இலங்கை ஏதோ இன்னொரு நாடு, அதன் இறையாண்மையில் நாம் தலை இடக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டால் தட்டி கேட்பது நம் தார்மீக உரிமை. எங்கோ இருக்கும் அமெரிக்காவால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விவகாரத்திலும் புகுந்து தன்கருத்தை நிலை நாட்ட முடிகிறது. இந்தியாவின் காலடியில் இருக்கும் இலங்கை யை கொஞ்சம் கட்டு பாட்டில் வைக்க ஏன் நம்மால் முடியவில்லை ?

1 comment:

  1. நல்ல பதிவு.

    வாழ்த்துக்கள்.

    //இலங்கை ஏதோ இன்னொரு நாடு, அதன் இறையாண்மையில் நாம் தலை இடக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டால் தட்டி கேட்பது நம் தார்மீக உரிமை.//

    இலங்கை இன்னொரு நாடு என்பது வரை சரிதான். ஆனால் அங்கு இறையாண்மை இருக்கின்றதா என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. இவ்வளவு அநியாயங்களை நேரில் பார்த்த பின்னரும் இலங்கை இறையாண்மை உள்ள இன்னொரு நாடு, அதில் நாம் தலையிடக் கூடாது என்பதெல்லாம் அறமும் ஆண்மையும் இல்லாதவர்களின் நயவஞ்சக பேச்சுத்தான்.

    நன்றி.

    ReplyDelete