Sunday 1 March 2009

இதோ வந்து விட்டது தேர்தல் திருவிழா..மக்களை ஒரு வழி செய்ய கிளம்ப போகிறார்கள் அரசியல்வாதிகள்.ஏப்ரல் மே மாதங்கள் களை கட்ட போகின்றன. இந்த தேர்தலுக்கு சுமார் பத்தாயிரம் கோடி ருபாய் செலவழிக்கப்பட இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. இதில் அரசின் செலவு சுமார் ரெண்டாயிரம் கோடி மட்டுமே. கடந்த வருடங்களில் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் முதல் போட்டு புதிதாய் பூசணிக்காய் உடைத்து தொழில் தொடங்க வருகிறார்கள் நம் அரசியல் கண்மணிகள். ரெண்டு மாதம் நன்றாக பொழுது போகும்.

ஆனால் புதிதாக ஒன்றும் நடக்க போவது இல்லை. அதே கள் புதிய மொந்தையில். அதே புழுத்த அரசியல்வாதிகள் அதே தொகுதியில். நடை தளர்ந்து போனாலும் தேர்தல் ஆசை விடாது மீண்டும் மனு தாக்கல் செய்வார்கள். மிஞ்சி போனால் அவர்கள் வாரிசுகள் தலை எடுப்பார்கள்.இந்தியாவில் அரசியலில் ஒரு முறை பேர் எடுத்து நின்றுவிட்டால் போதும் .வாழையடி வாழை யாய் அவர்கள் குடும்பம் தழைக்கும். மாற்று கட்சிகள் மீது சேறை வாரி இறைப்பார்கள்..மக்களுக்கும் கொஞ்சம் பணம் இறைப்பார்கள். நஷ்டம் இல்லாத வியாபாரம் இது.

மாணவர்கள் தேர்வுக்கு படிக்கும் நேரம் என்பதை மறந்து ஓயாமல் ஸ்பீக்கர் அலறும். சாதனை பட்டியல் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வரும். போன முறை தேர்தலுக்கு வந்து போன வேட்பாளர் போனால் போகிறது என்று இந்த முறை தொகுதிப்பக்கம் வருவார். கிழிந்த பனியன் போட்ட சாமானிய மனிதரிடம் கை குலுக்குவார்.ஆனால் ரிசல்ட் வந்தால் மறுபடியும் அடுத்த தேர்தல்தான்..
இந்த முறையாவது ஒட்டு போடும் ஜனங்களுக்கு நல்ல சாய்ஸ் கிடைக்குமா என்பதே கேள்வி. சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகர் பணி பார்த்து நொந்து நூலாகி வருத்தத்துடன் விடை பெற்றார். எல்லாம் நம்ம எம் பிக்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்துதான். இந்த ஐந்து வருடத்தில் உருப்படியாக பாரளுமன்றம் பணி செய்தது வெறும் 737 மணி நேரம் தான். வெட்டியாய் வாய் கிழிய கத்தியது 437 மணி நேரம்.சாதனையாக ஏகப்பட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் அதில் பாதி கூட அனைத்து உறுப்பினர்கள் அமர்ந்து பாஸ் செய்ய வில்லை. எல்லாம் லாபி அரசியல் தான் செய்துள்ளார்கள். இப்போது மீண்டும் பல் இளித்துக்கொண்டு வரபோகிரர்கள்.
இந்தியாவில் எது எதற்கோ விழிப்புணர்வு போராட்டங்கள் நடக்கின்றன.உதரணமாக வருமான வரி கட்டாத நபர்கள் பெயர் இன்டெர் நெட்டில் வெளியிடப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களில் ஒரு கேட் கீப்பர் வேலைக்கு கூட அவரை பற்றிய போலீஸ் விசாரணை நடத்தி நல்லவர் என்ற சான்று கொடுத்த பின்னரே வேலை. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மனிதர்கள் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

பிங்க் ஜட்டி போராட்டம் கூட நடக்கிறது. ஆனால் ஓட்டு கேட்டு வரும் மனிதர் பற்றி எந்த உருப்படியான தகவலும் நம்மிடம் இல்லை. கண்ட செய்திகளை தொடர்ந்து விழிப்புணர்வு என்ற பெயரில் மாவரைக்கும் ஊடகங்கள் கிரிமினல் பின் புலம் உள்ள வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து ஒளி பரப்பலாம். வேட்பாளர் சொத்து விவரங்கள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கலாம். போன தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் அவரது சொந்த முயற்சியில் என்ன கிழித்தார் என்று கேட்கலாம். தொகுதியின் அவல நிலைகளை பட்டியல் போடலாம். இந்த மாதிரி நிறைய "லாம்" இருக்கிறது. ஆனால் "லாம்" விட தனிப்பட்ட முறையில் தனக்கு என்ன "லாபம் " என மக்கள் பார்ப்பதால் தான் வெந்தும் வேகாத அரசியல் வாதிகள் சந்துகளில் புகுந்த தப்பி விடுகிறார்கள். அப்படி வலையை போட்டு பிடித்தாலும் ஜாதி அரசியல் மேற்சொன்ன எல்லாவற்றையும் ரப்பர் போட்டு அழித்து விடுகிறது. அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குலம். மூடைபூச்சி போல் எல்லா க்ரூப் ரத்தமும் அவர்களுக்கு சேரும்.

எனவே இந்த முறையாவது கட்சி பார்த்து , கலர் பார்த்து ஓட்டு போடாமல் , முன்னர் செய்த தவறுக்கு ஒட்டு போடாமல், வேட்பாளர் முகத்தை , முன்னோர்களை, குடும்பத்தை , கொள்கையை, செயல்பாட்டை, படிப்பை, குணத்தை பார்த்து ஓட்டு போடுங்கள்.(ஆனால் ரொம்ப கஷ்ட்டம்பா) . சரி.. அப்படி முடியவில்லை. எல்லாம் அழுகின தக்காளிகள் என்றால் ....சுமாராக அழுகியத்தை பார்த்து போடவும். அதுவும் முடியவில்லை என்றால் ரெண்டு மாசம் அவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து என்ஜாய் பண்ணவும். இருக்கவே இருக்கிறார்கள் பிரணாய் ராயும், ராஜ்தீப் சர் தேசாயும் . டிவி முன் உட்கார்ந்து பொழுதை கழியுங்கள். நம்மை மெதுவாக அரசியல்வாதிகள் கழிப்பார்கள்.

3 comments:

  1. நெற்றியில் தட்டியது போன்ற ஒரு பதிவு. வாழ்த்துக்கள் பொதுஜனம்.

    நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே "very much valid".

    சமூகத்திலிருந்துதான், தலைவர்கள் உருவாகுகிறார்கள். சமூகத்திலேயே ஊழல் புரையோடிப் போயிருக்கும் போது, சிறந்த தலைவர்களை எதிர்பார்க்க முடியாது. எனவே, நமது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பு இது, "தனிப் பட்ட முறையில் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்". ஆனால், இது எளிதில் நடக்கக் கூடியது அல்ல. எனவே, நாம் கொஞ்ச நாளைக்கு நமது அரசியல்வாதிகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

    நன்றி

    ReplyDelete
  2. நன்றி. நம் வாழ்நாளில் சுமார் பதினைந்து அரசுகளையாவது தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் கொஞ்சம் யோசித்து கசங்கி போன மூளையை விரித்து வைத்து யோசித்து ஒட்டு போட்டால் நாளைக்கு நம் சந்ததியினர் மூளை குழம்பாமல் இருப்பார்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவுங்க

    ஆனா எந்த திருடன் கம்மியா திருடுரான்னு பாத்து அந்த திருடனுக்கு ஓடுப்போடலாம்னு சொல்லுரீங்க அதுவும் சரிதான்.யாருக்கும் ஓட்டுப்போட விருப்பமில்லைனு ஒரு பட்டன மட்டும் வெக்க வுடமாடிங்குராங்க.அது நடந்தா நல்லாருக்கும்

    ReplyDelete